Wednesday, June 28, 2006

GCT யில் ஒரு VIP யுடன் சந்திப்பு !

சென்ற வாரம் GCT கல்லூரிக்கு, நான் பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus Recruitment) செல்ல நேர்ந்தது. எப்போதும் போலவே கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகானுபவமாகத் தோன்றியது! சந்தித்த மாணவப் பிரதிநிதிகள், மிக அடக்கமாகவும், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த மிக உதவியாகவும் இருந்தார்கள். Girls College of Technology என்று சொல்லும் அளவுக்கு மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது !! நான் பயின்ற காலகட்டத்தில், பொறியியற் படிப்பில் தகவல் தொழில்நுட்பம், கணினிவியல் போன்ற கிளைகள் இல்லை. நான் பழைய மாணவன் என்றவுடன் கல்லூரியின் Placement coordinator (முனைவர் தண்டபாணி) நான் கல்லூரி முதல்வரை (முனைவர் திரு. பழனிச்சாமி) சந்திக்க ஏற்பாடு செய்து விட்டார்.

அதற்கு முன்பே, நான் சந்திக்க விரும்பிய VIP க்கு போன் செய்து, என்னை சந்திப்பதற்கு GCT வர இயலுமா என்று கேட்டதற்கு, 'இதோ புறப்பட்டு வருகிறேன், எங்கு காத்திருக்கிறீர்கள் ?' என்றார் !!! சொன்னபடி, அரைமணி நேரத்தில் அந்த VIP வந்து சேர்ந்தார். சிலரை முதல் முறை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடும். VIPயும் அந்த வகையைச் சேர்ந்தவர். இதில் ஆச்சிரியம் என்னவென்றால், கோயமுத்தூரைச் சேர்ந்த, முன்னாள் GCT மாணவரான அந்த VIP, கிட்டத்தட்ட 15 வருடங்களூக்குப் பிறகு அன்று தான் GCT வளாகத்தில் காலடி எடுத்து வைக்கிறார் !!! நான் மூன்று வருடங்களுக்கு முன் மேற்கொண்ட GCT பயணம் குறித்து முன்பு நண்பனுக்கொரு மடல் வரைந்திருக்கிறேன்!

VIPயை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். முதல்வருக்கு ஏற்கனவே, VIP குறித்து ஒரு முன்னுரை தந்திருந்தேன் !! என் வேண்டுகோளுக்கு இணங்க, VIP தான் செய்து வரும் தமிழ்ப்பணி பற்றி முதல்வருக்கு அழகாக ஒரு சிறு குறிப்பு வரைந்தார் ! பின்னர், முதல்வருக்கு விடை கொடுத்து விட்டு, VIPயும் நானும் காண்டீன் சென்று சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம். VIP தான் சமீபத்தில் தொடங்கிய தொழில் மற்றும் வடிவமைத்து வரும் product குறித்தும் ஒரு சிறு விளக்கம் தந்தார். VIP மிகவும் interesting-ஆன மனிதர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் (அவரும் என்னைப் போலவே ஒரு GCTian இல்லையா :)) !!! அவருடன் நிறைய பேச விரும்பியும், நேரமின்மை காரணமாக முடியவில்லை. VIPக்கு விடை கொடுத்து விட்டு GCTக்கு வந்த வேலையை பார்க்கத் திரும்பினேன்!

ஒரு மாணவரை நேர்முகத் தேர்வு செய்தபோது, அவரை பணிக்கு எடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு சிறு குழப்பம் எனக்கும் என்னுடன் வந்த மேலாளருக்கும் நிலவியது. நான் அந்த மாணவரிடம் அவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்னவென்று வினவினேன் . அவர் 1170/1200 என்றவுடன், அவரை உடனே தேர்ந்தெடுத்து விட்டேன் !!! அம்மாணவர் நிச்சயம் கடின உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பின், கடின உழைப்பு என்ற ஒன்றை வைத்து, தேவையான பிற தகுதிகளையும் அந்த மாணவர் தனதாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

சரி, சரி ! VIP மேட்டருக்கு வருகிறேன் ! VIP வேறு யாருமில்லை, "தமிழ்மணம்" காசி தான் ! வலைப்பதிவுலகில் தற்போது நிலவி வரும் சச்சரவுகள்/சர்ச்சைகள் பற்றியும் கொஞ்சம் பேசினோம். அவற்றைப் பற்றி எழுதி எதையும் கிளறுவதாக இல்லை, மன்னிக்கவும் !!!

GCT நினைவுகள் பற்றி சமீபத்தில் எழுதியவை, உங்கள் பார்வைக்கு:
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 1
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, June 25, 2006

என் வலைப்பதிவு குறித்து "Blogthings" கூறியது !

முத்துவின் என்ன கொடுமை சார் இது? பார்த்து விட்டு Blogthings பக்கம் சென்று அங்கு கேட்ட கேள்விகளுக்கு விடையளித்த பின் கிடைத்த, என் வலைப்பதிவு பற்றிய விமர்சனம் கீழே !!! நிஜமாகவே, "கொடுமை" தான் ;-)

Your Blogging Type is Unique and Avant Garde

1. You're a bit ... unusual. And so is your blog.

2. You're impulsive, and you'll often post the first thing that pops in your head.

3.Completely uncensored, you blog tends to shock... even though that's not your intent.

4.You tend to change your blog often, experimenting with new designs and content.



முதல் கருத்து தவறு :(

இரண்டாவது கருத்து ஓரளவு சரி தான் !!!

மூன்றாவது கருத்து அநியாயமானது :((

நான்காவது கருத்து ஓரளவு சரி தான் !!!

நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, June 24, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 6

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் ...

2 சித்திரம் பேசும் தத்துவம் ஒன்று, எழுதியவன் எங்கே....

3. கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள் ...

4. உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் ...

5. சிற்றிடை என்பது நூலளவு ...

6. அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகமென்று அதற்கொரு தலைநகரோ ...

7. ஒளியாய் தோன்றி நிழல் போல் மறைந்தாள் ...

8. இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்...

9. இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும் ...

10. கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே ...

11. பொங்கும் மகிழ்வுடன் மங்கல நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ...

12. நாணமுன்னு வெட்கமுன்னு நாலுந் தான் இருக்குதுங்க ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************

Thursday, June 22, 2006

பெரியார் திரைப்பட சர்ச்சை

இயக்குனர் ஞானராஜசேகரன் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருப்பதும், அதில் பெரியார் வேடத்தில் சத்யராஜும், மணியம்மையாக நடிக்க குஷ்பூவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இத்திரைப்படத்திற்காக திராவிட கழகத்தினர் தமிழ்நாடு முழுதும் நிதி திரட்டுவதாகவும் செய்தி வெளி வந்தது. இதைத் தொடர்ந்து, மணியம்மையாக நடிக்க குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்கிறது என்றும், அப்பாத்திரத்தில் நடிக்க ஒரு தமிழச்சி நடிக்க ஒரு தமிழச்சி கூடவா கிடைக்கவில்லை என்றும் தி.க வினர் கொதிந்தெழுந்து விட்டனர் !

ஒரு வேடத்தில் நடிப்பதற்கு, ஒருவர் ஓரளவு திறமையும், அனுபவமும் உள்ள நடிக/நடிகையாக இருந்தாலே போதுமானது என்பது பகுத்தறிவாளர்களுக்குக் கூட புரியாமல் போனது ஆச்சரியாமாக இருக்கிறது ! மேலும் அவர் எந்த மொழிக்காரராக இருந்தால் தான் என்ன ? 'பாரதி' திரைப்படத்தில் நடித்த ஷிண்டே மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் தானே! தமிழ் தெரியாதவராக இருந்தும் அற்புதமாகவே நடித்திருந்தார்.

மேலும், குஷ்பூ என்ற தனிநபரின் கற்பு குறித்த கருத்துக்கள் தங்களுக்கு உவப்பானதாக இல்லை என்பதற்காக, அவர் மணியம்மையாக நடிப்பதற்கு திகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது சற்றும் சரியில்லை. குஷ்பூ, பல திரைப்படங்களில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்திருப்பதை சுட்டிக்காட்டி கு.திருமாறன் என்ற தி.க. காரர், குஷ்பூவைப் போலத் தான் மணியம்மை இருந்திருப்பாரோ என்ற எண்ணம் இப்போதைய தலமுறையினரிடம் உருவாகி விடுமோ என்ற பதற்றத்தில் தான் திகவினர் ஆவேசப்படுவதாகக் கூறியிருக்கிறார் ! இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு கருத்தா ???? இன்றைய தலைமுறையினர் நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அறிவிலிகளா என்ன ??? முதலில், அவரின் இக்கருத்து கண்டனத்துக்குரியது !

குஷ்பூ போலவே, கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ள மீனா, ரோஜா போன்ற நடிகைகள், சில திரைப்படங்களில் அம்மன் வேடமேற்று நடித்திருக்கின்றனர். இது அம்மன் பக்தர்களை இழிவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியுமா ? மேலும் திகவினரை விட மெஜாரிட்டியில் இருக்கும் ஆத்திகர்கள் யாரும் இதற்கு கொதித்தெழுந்ததாக நினைவில்லை ! சத்யராஜ் நாத்திகராக இருப்பதால் பெரியாராக நடிக்க தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், தனது ஆரம்ப கால திரைப்படங்களில் வில்லனாக, பல கதாநாயகிகளை கற்பழிப்பவராக நடித்திருக்கிறார். எனவே, சத்யராஜ் போலவே பெரியார் இருந்திருப்பாரோ என்று கூறி அவரை எதிர்ப்பது எவ்வளவு அபத்தமானதோ, அது போலத் தான் குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்து கலாட்டா செய்வதும் கூட !!!

இறுதியாக, இத்தனை ஆண்டுகள் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நல்லதொரு திரைப்படமாக எடுக்க பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் பெரிதாக முயற்சி எதுவும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்ய முன் வந்த ஞானராஜசேகரனின் (நடிக நடிகையரை தேர்ந்தெடுக்கும்) சுதந்திரத்தில் தலையிட்டு அவரை மிரட்டிப் பணிய வைக்கும் முறையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது எவ்வகையிலும் நியாயமான செயலாகத் தோன்றவில்லை !!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 19, 2006

இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்

1. IIT களிலும், IIM களிலும் ஆண்டுதோறும் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் பெரும்பாலோர், முற்பட்ட வகுப்பினரே என்ற நிலைமை, தகுதி (Merit) உடையவர் பலரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றினாலும், தகுதிக்கு, பலமான அடிப்படைக் கல்வி ஒரு முக்கியக்காரணம் இல்லையா ? அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களை தகுதியற்றவர் என்று கூற முடியுமா ? தற்போது படிப்பால் உயர்ந்துள்ள பிற்படுத்தப்பட்டவரில் 75 சதவிகிதத்தினர், பெற்றோர் அல்லது நண்பர்கள் வாயிலாக அறிவு பூர்வமான ஆதரவு எதுவும் கிடைக்கப் பெறாதவரே. அதனால், தரமான அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வல்ல சூழலை முதலில் உண்டாக்குவது அவசியமான ஒன்று. இதன் மூலம், பல தரப்பினரும் தகுதி அடிப்படையில் போட்டியிடவல்ல காலம் வரும் வரையில், இடஒதுக்கீடு தேவையான ஒன்றாகவே தோன்றுகிறது.


2. அடுத்து, OBC யில் உள்ள creamy layer தரப்பினரையும், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்களையும் இடஒதுக்கீட்டில் சமனாகக் கருதும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவது, சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, இடஒதுக்கீட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சுமுகமான சூழல் ஏற்பட பெருமளவு உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து.


3. IIT மற்றும் IIM களில் படிப்பவர்களுக்கு எதற்கு சாமானியரின் வரிப்பணத்திலிருந்து அரசு, கல்விக் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் ? இக்கல்லூரிகளில் பயில்பவர்களில் பெரும்பாலோர் பொருளாதாரச் சூழல் நன்றாக உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். நுழைவுத் தேர்வுக்கு நிறைய செலவு செய்து பயிற்சி மேற்கொண்டு தேர்வெழுதுபவர்கள் தான் ! எப்படியும் இக்கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் 90 % சதவிகிதம் பேர் அயல்நாடு சென்று விடுகின்றனர். மேலும், படிப்பு முடிந்தவுடன், அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், தேவையென்றால், படிப்புக்கு கடனுதவி மட்டும் வழங்குவதே சரியானது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, June 18, 2006

"தேன்கூட்டில்" ஒரு தேனீயானேன்!

ஜூன் 15 அன்று, 'இன்றைய வலைப்பதிவராக' தேன்கூட்டில் என்னைப் பற்றிய அறிமுகமும், என் வலைப்பதிவு குறித்த சிறு விமர்சனமும் வெளி வந்தன. முதற்கண், தேன்கூடு ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி !

இதுவரை என் வலைப்பதிவு பற்றி வலையில் வெளிவந்த ஒரு சில குறிப்புகளிலிருந்து இது வித்தியாசமாக அமைந்த ஒன்று ! எனது பல பதிவுகளை வாசித்து, அதன் பின் சுவாரசியமாக எழுதப்பட்ட நல்லதொரு விமர்சனமாக இதைக் கருதுகிறேன். இதனால் என் எழுத்துக்களுக்கு மேலும் பல வாசகர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன். 'தேன்கூட்டில்' ஒரே ஒரு நாள் 'ராணி தேனீ' ஆனது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் :)

தேன்கூட்டில் வந்த விமர்சனம் கீழே:

கோவை GCT கல்லூரியில் படித்து சென்னையில் பணிபுரியும் இவர், கவிதைகள்,பாசுரங்கள், அரசியல், கிரிக்கெட், திரைப்பாடல்கள், கதைகள் என்று பல துறைகளையும் தொடுபவர்.
[ஆஹா, ஆல்ரவுண்டர் தகுதியை கொடுத்து, பொறுப்பை அதிகம் ஆக்கி விட்டீர்கள் !]

இவரது இடுகைகளில் 'சிறுவயது சிந்தனைகள்', 'பல்லவியும் சரணமும்' போன்றவைஅதிகம் சிலாகிக்கப்பட்டவை.
[இவை எனக்கு நிறைய வாசகர்களை பெற்றுத் தந்தவை, இவற்றால் தான் முதலில் அறியப்பட்டேன்.]

வலைப்பதிவர் தேசிகனால் [இவர் சாதாரணமான ஆளா என்ன ?] அறிமுகப்படுத்தப்பட்ட 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வும் இழையோடும், ஆத்மார்த்தமான நேசமும் தென்படும்.
[நன்றி]

சுஜாதாவின்எழுத்துக்களை ஆழமாக ரசிப்பவர்.
[ஐயோ, ரவி ஸ்ரீநிவாஸோடு சண்டை வரும் அபாயம் ஏற்பட்டு விடும் போலிருக்கிறதே ;-)]

அவ்வப்போது இவரது தோழர்களுக்கு பகிரங்ககடிதம் எழுதி நினைவலைகளில் மூழ்குபவர்.
[என் ஆத்ம நண்பன் குறித்த பதிவுகளை நினைவு கூர்ந்ததற்கு ஸ்பெஷல் நன்றி!]

வலைப்பதிவுகள் தவிர, திண்ணை, தமிழோவியம்,
அந்திமழை போன்ற இணைய பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் வலைப்பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்றுவரும் 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் நகைச்சுவை பதிவுகள் பலராலும் ரசிக்கப்படுபவை. இவரது பதிவினைப் பற்றி அவரே எழுதிய இடுகை இது.
[சுயதம்பட்டத்தை சுட்டிக் காட்டி விட்டீர்கள் :)]

என்றென்றும் அன்புடன்,
பாலா

Saturday, June 17, 2006

Reservation குறித்து மூன்று கேள்விகள்

'தலைப்பு' ஊக்கம்: அன்புக்குரிய 'பெனாத்தலார்'

1. பிற்படுத்தப்பட்டவரில், Creamy Layer வகையினர் சிறிய சதவிகிதமே இருக்கையில், அவர்களை 27% உயர்கல்வியில் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கு, சிலர் ஏன் ஆரவார எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ? இதற்கு சுயநலம் தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா ? கம்யூனிஸ்ட்கள் Creamy layer-ஐ விலக்கி வைப்பதற்கு ஆதரவாக குரல் எழுப்பியது, இது குறித்து மத்திய அரசுக்கு சரியான செய்தியை அனுப்பியிருக்கும் என்று நம்பலாம்.

2. திரு.ராமதாஸ், Creamy Layer-க்கு ஆதரவாக, ஒருவர் நூறு பன்றிகள் வைத்திருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் சம்பாதித்தும், அவர் குடும்பத்தில் ஒருவர் கூட படிக்காமல் இருப்பதற்கான சாத்தியத்தை (இந்த வார குமுதம் பேட்டியில்!) எடுத்துக் காட்டி, பொருளாதார அளவுகோல் கூடாது என்கிறார் ! நல்ல உதாரணம் தான் ! இதற்கு எதிர்மறை லாஜிக்கின்படி, பொருளாதார பற்றாக்குறையினால், தகுதியிருந்தும் படிக்க வழியில்லாத முற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு சிறு சதவிகிதம் தருவதில் என்ன தவறு ?

3. தொடக்கக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவருக்கு 25% சதவிகித இடஒதுக்கீடு என்பதை கிடப்பில் போட்டு விட்டு, உயர்கல்வியில் மட்டும் இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரும் இந்த முயற்சி "ஓட்டு வங்கி அரசியல்" அன்றி, வேறென்னவாக இருக்க முடியும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails